yarlathirady.com

ஜனாதிபதி தேர்தலும் மலையக மக்களும்...!!

[2024-08-09 10:59:29] Views:[15]

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்றைய தினம் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். ஆனால் இப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எமது மலையக மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதை மலையக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 1977 ஆம் ஆண்டில் எமது மலையக மக்கள் வாக்களித்து தமது முதல் பிரதிநிதியை பாராளுமன்றம் அனுப்பிய காலத்திலிருந்து மலையகத்தில் பெரும்பாலும் இணக்க அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேசமயம் யார் ஜனாதிபதியானாலும் அவர்களுடன் இணைந்து எப்படியாவது பதவிகளை பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சிலவற்றை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்து காலத்தை கடத்துவோம் என்ற மனநிலையிலேயே மலையக அரசியல்வாதிகள் தமது அரசியலை காலம் காலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோன்று இலங்கை அரசியலைப் பொறுத்தவரை எமது மலையக சமூகம் ஒரு நாளும் எதிர்ப்பு அரசியலுக்கும் பழக்கப்படவில்லை. பார்வையாளர்களாகவும் வாக்காளர்களாகவும் மட்டுமே இருந்து வருகின்றது. இங்கு தேர்தல் என்று வரும்போது மலையகத்தில் மக்கள் தீர்மானிப்பதற்கு எதுவும் இல்லை.அதற்கு முன்னரே இங்குள்ள மலையக கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு ஜால்ரா தட்டுவதற்கு தயாராகிவிடுகின்றன.

மக்களின் பிரச்சினைகளின் முன்பதாக அமைச்சு பதவிகளும் அதிகார ஆசையுமே அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிகின்றன. இத்தனை காலத்தில் மலையக பிரதிநிதிகள் கண்டுகொள்ளாத மலையக சமூக அடிப்படை பிரச்சினைகளை புதிதாக வரும் ஜனாதிபதி தீர்த்து வைக்கப் போகிறாரா? மலையக மக்களின் அரசியல் கௌரவம் என்பது 200 வருட காலம் எட்டாவது பரம்பரையாக வாழ்ந்து வரும் நிலத்தோடு தொடர்புடையது.

200 வருடம் லயன் குடியிருப்புகள் இன்னமும் மாறவில்லை. அவர்களுக்கென்று நில உரிமை கிடையாது. சரியான போக்குவரத்து பாதை வசதிகள் கிடையாது, அடிப்படை வசதிகள் என்பது மிக மிகக் குறைவு. ஆடம்பர வாகனங்களிலும் அதிசொகுசு பங்காளக்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக அரசியல் பிரதிநிதிகளுக்கு தெரிய போகின்றதா லயன் குடியிருப்புகளில் அல்லல் படும் எம்மக்களின் வேதனை?

இதுவரை காலமும் எம்மக்கள் வாக்களித்த கட்சிகள் அத்தகைய கௌரவத்துடனான வாழ்வு கலாசாரத்திற்கு அடித்தளமிட்டுள்ளனவா? மலையக மக்களே எங்கள் உயிர் மூச்சு என மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகள் அவை எல்லாவற்றையும் கொஞ்ச காலத்தில் காற்றிலே பறக்க விட்டு விட்டு சலுகை அரசியலை தக்கவைப்பதற்காக தேசிய கட்சிகளோடு முட்டுக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

மலையகத்தை பொருத்தவரை இதற்கு முன் இருந்த அரசியல் கட்சிகளும் சரி தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளும் சரி எமது மக்களுக்கான அரசியல் ரீதியான அடிப்படை உரிமைகளையும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுக்க தவறிவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு சிறந்த உதாரணமாக பெருந்தோட்ட மக்களின் வேதன உயர்வு விடயத்தை குறிப்பிடலாம். இவ்விடயத்திலேயே மலையக தலைமைகளின் இயலாமை நன்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையும் பத்தோடு பதினொன்றாக தான் எமது மலையக சமூகம் பார்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.