இலங்கை தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பிளவு..! இரண்டு அணிகளாக இயங்கும் நிலை:
[2024-08-25 11:42:25] Views:[20]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்று தீர்மானிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தற்போது தமிழரசு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கட்சியை சார்ந்த தலைவர்களின் ஊடக சந்திப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகள் அதனை வெளிப்படையாகவே காட்டுகின்றன.
ஸ்ரீதரன் அணி மற்றும் சுமந்திரன் அணி என கட்சி இரண்டாக இயங்குகின்றமை தெரிகிறது. ஒரு பக்கம் பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் கட்டாயம் எனவே பொதுத் தமிழ் வேட்பாளர் அரியேந்திரனுக்கு முழு ஆதரவினையும் வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில்,
மறுபக்கத்தில் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை அரியேந்திரனுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம் மக்கள் வாக்களிப்பார்கள் என கூறிவருகின்றார்.
தமிழ் தேசிய அரசியலில் மூத்த கட்சி ஒன்று தன் கட்டமைப்பிலிருந்து உடைந்து இருப்பது அரசியலில் ஆரோக்கியமற்ற விடயமாகும். இருப்பினும் தங்களின் அரசியல் சுயநலத்திற்காகவே இவ்வாறு ஆளுக்கொரு பக்கம் சிதறிப் போய் இருக்கின்றார்கள் என்பதுவே உண்மை.
ஏற்கனவே கட்சி தலைவர் தெரிவில் ஏற்பட்ட குளறுபடியால் சிறிதாக உடைந்திருந்த தமிழரசுக் கட்சி தற்போது சுக்கு நூறாக உடைந்து விட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் பழம்பெரும் கட்சி என்ற நம்பிக்கையை இழந்து பொதுமக்கள் மத்தியிலும் தற்போது கட்சி மீது ஒருவித விரக்தி நிலையே காணப்படுகின்றது.
இவர்களின் குறுகிய கால நோக்கங்களுக்காகவும், சுயநல அரசியலுக்காகவும் தாங்கள் வெவ்வேறாக இயங்கிக் கொண்டு இவர்களின் போட்டியில் மக்களை பலிகடாவாக்குவார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.










